Samstag, 11. Februar 2012

கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஐ.தே.க.வின் நிலைப்பாடு

(1)இலங்கையைப் பாதிப்பிற்கு உள்ளாக்கிய போரைத் திரும்பிப் பார்ப்பதற்கும் நாட்டில் மீண்டும் சீர்நிலையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் யுகம் ஒன்றை எதிர்நோக்குவதற்குமென' நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு இடைக்கால அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து அதனைத் தொடர்ந்து அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பணிப்பாணையின் பிரதான பாகமாகிய இன்றியமையாத விடயங்களில் திட்டவட்டமானதும் உண்மையானதுமான ஆய்வின் முடிவுகள் எவையும் இல்லாதிருப்பதனை நாம் ஆரம்பத்திலேயே பதிவு செய்ய விரும்புகின்றோம்.

2. போர் நிறுத்த உடன்படிக்கை கருத்துருவில் தவறானது என்ற ஆணைக்குழுவின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்னணியை அல்லது அதன் செயற்பாடுகளைப் பற்றி நன்றாக அல்லது எதுவுமே அறிந்திராத ஜாவிட் யூசுப் என்பவரிலும் பேச்சுவார்த்தைகளுக்கும் இணக்கப் பேச்சு வார்த்தையின் அடிப்படையிலான தீர்வுக்கும் முற்றாக எதிர்ப்பு தெரிவித்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பிலும் தங்கியிருப்பதில் குறைபாடுகள் உண்டு. போர் நிறுத்த உடன்படிக்கையின் தோல்வி தொடர்பாக ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வின் தாக்கத்தையும் இந்தத் தேர்தலின் பின்னர் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்தாமை சம்பந்தமாகவும் கருத்தில் கொள்ளவில்லை. டோக்கியோ பிரகடனம் உட்பட 2005 இல் ஐ. தே. க. வினால் சமர்ப்பிக்கப்பட்ட சமாதான செயல்முறைத் தொகுப்பு நிராகரிக்கப்பட்டமை ஆணைக்குழுவால் அதன் அறிக்கையில் விட்டு விடப்பட்டுள்ளது. மேலும் சமாதான செயன்முறையின் பின்னர் தீர்வொன்றைக் காண்பதற்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் சர்வதேசத்தின் கடப்பாட்டை ஆணைக்குழு கருத்திற் கொள்ளத் தவறிவிட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை இலங்கையின் பொருளாதாரத்தின் மீது கொண்டிருந்த சாதகமான விளைவுகளையும் ஆணைக்குழு கருத்திற் கொள்ளவில்லை. 2001 இல் 1 வீதமாகவிருந்த எதிர்மறையான மொத்த உள்ளூர் உற்பத்தி ஓராண்டிற்குள் 2002 இல் 4 வீதமாக வளர்ந்தது. போர் நிறுத்த உடன்படிக்கையின் சமூக பொருளாதார நன்மைகள் தொடர்பாகவும் ஆணைக்குழு மௌனம் சாதிக்கின்றது.

3.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டுமே போர்க்களத்தால் சூழப்பட்டிருந்தன. இலங்கை அரசாங்கத்தினதும் புலிகளினதும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் பெருந்தொகையான மக்கள் பாதிக்கப்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் உடனிணைந்த சேதங்களுள் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் புலம் பெயர்வும் அவர்களது வாழ்வாதாரங்களினதும் வாழ்க்கை நிலைமைகளினதும் பாதிப்பும் அடங்கும். தெற்கில் பல பகுதிகளிலும் ஆழமாக வடுக்களை ஏற்படுத்திய இந்தப் போர் நாட்டின் எந்தவொரு பாகத்தையும் விட்டு வைக்கவில்லை. இறப்புகளின் எண்ணிக்கையும் காயப்பட்டு ஆதரவை நாடி நிற்கும் மக்களின் எண்ணிக்கையும் இன்னமும் சரியாக கணிப்பிடப்படவில்லை. முகாம்களில் முடங்கிக் கிடப்பவர்களினதும் போர் இடம்பெறாத வலயங்களில் சிக்க வைக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கையையும் அரசாங்கம் சரியாக கணிப்பிடத் தவறியமைக்கான காரணங்கள் என்ன என்பதையிட்டும் ஆணைக்குழு போதியளவில் விசாரித்தறியத் தவறிவிட்டது. போரின் கடைசி வாரத்தில் போர் நடைபெறாத வலயத்திலிருந்து தப்பியோடிய குடிமக்களைக் குடியமர்த்துவதற்கு போதியளவு ஆயுதங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது. அத்தகைய விளைவொன்றுக்கு அரசாங்கத்தின் தயார் நிலையும் ஆணைக்குழு பரிசீலனை செய்யத் தவறிவிட்டது.

4.போர் இந்தப் பிரதேசங்களில் வதியும் மூன்று பிரதான சமூகத்தினரையும் பாதித்தது என்பதை அரசாங்கம் மிகவும் சரியாகவே ஒப்புக்கொண்டுள்ளது. மிக அவசரமான பிரச்சினைகளுள் ஒன்று புலம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றமும் அதனோடு தொடர்புடைய காணிச் சொத்துரிமை சார்ந்த பிரச்சினைகளுமாகும். ஆணைக்குழு இந்தப் பிரச்சினைக்கு முனைப்பாக கருத்தைச் செலுத்தவில்லை. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நன்கு பயிற்றப்பட்ட நிர்வாக அலுவலர்களில் தங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. நிலையான தீர்வொன்றைக் காணவேண்டுமாயின் விரிவான சட்டவாக்கம் தேவை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவாலும் நியமிக்கப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கையின் உள்நாட்டில் புலம்பெயர்ந்த ஆட்களையும் அகதிகளையும் பாதிக்கும் ஆதனம் தொடர்பாக பிரச்சினைகளைப் பற்றிய சட்டப் பகுப்பாய்வு, என்னும் தலைப்பிலான அதன் அறிக்கையில் இந்தப் பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்தியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் மே. நீ. விண்ணப்பம் 620/ 2011 இல் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட"பிம் சவிய' என்னும் காணி உரித்துப் பதிவு பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் வழக்கை தடைசெய்யும் நிறுத்தற் கட்டளையையும் வழங்கியுள்ளது.

5. இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து புலம் பெயர்ந்தமை பெருந்தொகையான குடிமக்களின் இறப்புகள், தனியார் ஆதனங்களின் அழிவு கிராமிய சமுதாயங்கள் ஒட்டு மொத்தமாக காணாமற் போனமை என்பன ஒரு தேசிய பேரதிர்ச்சியாகும். இது மிகவும் நீண்டகாலத்திற்கு எம்மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கும். அத்துடன் வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு எம்மனதில் விசேடமாக தமிழ் மக்களின் மனதில் வேரூன்றியிருக்கும்.

6. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கவனத்திற் கொள்ளப்படாமையும் நாம் அவதானிக்கிறோம். ஐ.நா. வின் அறிக்கை வெளிப்பட்டமையின் விளைவாக ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பொறுப்புகூறும் தன்மை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையே கையாளும் என்ற நிலைப்பாட்டையே அரசாங்கம் கொண்டிருந்தது. ஆணைக்குழுவின் அறிக்கையின் தவறுகை ஐ. நா. அறிக்கையின் பெரும் பாகத்திற்கு மறுமொழி அளிக்கப்படாதிருப்பதே.

7. 10, 000 குடிமக்களின் இறப்புகள், ஒரு அத்தியாவசியமான பலி என்ற நவின் திசாநாயகவின் கூற்று மேலும் புலனாய்வு செய்யப்படுதல் வேண்டும். எனவே யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின் மீதும் பதில் சொல்லும் பொறுப்பு பற்றிய பிரச்சினையின் மீதும் முடிவொன்றுக்கு வருவதற்கு முன்பு கிடைக்கக்கூடிய சான்றையிட்டு மேலும் ஆழமாக அவதானித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆணைக்குழுவின் முன்னிலைக்குக் கூட அழைக்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக அத்தகைய வெளிப்பாடொன்றின் விளைவாக இடம்பெற்றிருக்கக் கூடிய அழிவையும் சேதத்தையும் மட்டுப்படுத்துவதற்கு நியாயமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு ஆணைக்குழுவின் முடிவுகள் பதிலளிக்கவில்லை.

8.சனல் 4 வீடியோ சர்வதேச மனித உரிமைகள் மீதான முகவராண்மைகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சனல் 4 வீடியோ ஒளிப்பரப்பிற்கு ஆணைக்குழு தனது கருத்தைச் செலுத்தியுள்ளதுடன் வீடியோ காட்சியிலிருந்து எழுகின்ற சார்ந்துரைகள் உண்மையானவையா? பொய்யானவையா? என்பதை நிலைநாட்டுவதற்கு இவ்விடயங்கள் தொடர்பில் சுயேச்சையாக புலனாய்வை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என சரியாகவே விதப்புரை செய்தது. சுயேச்சையான விசாரணைக்கான செயல்முறை அமைப்பு பாரமட்சமற்ற விசாரணையொன்றை நடத்தக்கூடிய ஆற்றல் கொண்டதாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அரசாங்கம் மனித உரிமைகள் பதிவில் முன்நோக்கிச் செல்லக் கூடியதாக இந்த விடயத்தை முடிவுறுத்துவதற்கு மிகவும் அவசரத் தேவையுள்ளது.

9.தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயங்களையிட்டு விசாரணைகளின் முடிவொன்றை நாம் பலமாக விதந்துரைக்கிறோம்.

10.இயைபான அதிகாரிகளுக்கு நம்பத்தகுந்த தகவலுடன் அறிக்கையிடப்பட்ட குடிமக்களின் இறப்புகளையும் காணாமற் போதலையும் பற்றி புலனாய்வு செய்வதற்கு அர்த்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஆதலால் அறிக்கையின் 9 ஆம் அத்தியாயத்தின் 9.37 (அ), 9.41, 9.50 ஆகிய பந்திகளில் குறிப்பீடு செய்யப்பட்ட அத்தகைய விடயங்களையிட்டு மேலும் புலனாய்வுகளை மேற்கொள்வதற்கு எல். எல். ஆர். சீ. யால் விதப்புரை செய்யப்பட்ட பல்வேறு சுயேச்சையான குழுக்களை அரசாங்கம் மேலும் நியமித்தல் வேண்டும்.

11. புலம்பெயர்ந்த அனைத்து மக்களும் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் சென்று தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கவே இயல்பாகவே ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் எந்த வாழ்க்கைத் தொழிலில் அனுபவமும் தேர்ச்சியும் கொண்டுள்ளனரோ அந்த வாழ்க்கைத் தொழிலில் அவர்கள் ஈடுபடுவதனை இயலச் செய்வதற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் அளிக்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க முறையில் இடம்பெறுவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்நோக்கத்திற்கு அவசியமான நிதி வளங்களையும் அரசாங்கம் கிடைக்கச் செய்தல் வேண்டும்.

12.சனநாயக கோட்பாடுகளின் சிதைவு சட்டத்தை வலுவுக்கிடுவதில் அரசியல் தலையீடு பகிரங்கத்துறையை அரசியல் மயமாக்குதல் நல்லாட்சி காணப்படாமை சுயேச்சையான ஆணைக் குழுக்கள் இல்லாமை என்பன அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தங்கள் குறைகளையிட்டு கவனம் செலுத்துவதற்கு அரசாங்கத்தின் ஆற்றலிலும் விருப்பத்திலும் ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் நம்பிக்கை இழப்பதற்கும் இது பொறுப்புடையதாகும். சனநாயக நிறுவனங்களை அச்சுறுத்தும் பிரச்சினைகளையும் சனநாயகக் கோட்பாடுகளையும் நல்லாட்சியையும் மனித உரிமைகளையும் மேம்படுத்த வேண்டிய தேவைப்பாட்டையும் ஒப்புக் கொண்டமைக்கு ஆணைக்குழுவைப் பாராட்டாது விட்டால் ஐ. தே. க. அதன் கடமையில் தவறியதாக அமையும்.

13. நல்லிணக்கம் (பந்திகள் 9.167 9.285) மற்றும் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் வரவேற்கும் அதே வேளை இனத்துவ மத அல்லது அரசியல் பாகுபாடுகள் கொண்ட பிரிவுகள் இல்லாது முழுமையாக செயற்படும் சனநாயகமே இந்தக் காலக்கட்டத்தின் தேவையாகும் என்பதை ஐ.தே.க. வலியுறுத்த விரும்புகின்றது. ஐ. தே. க. பின்வருவனவற்றை முன்மொழிகிறது.ஐ.அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் மக்களை கைது செய்தல் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் எடுத்தல் உட்பட ஆட்கடத்தல்கள் தன்னார்வமின்றி காணாமற் போதல் என்பன பற்றி புதிய சட்டவாக்க ஏற்பாடுகள்.சாட்சிகளின் பாதுகாப்பிற்கு பயனுறுதியுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியம்.அண்மைக்காலத்திலும் இன்றும் கூட பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களையிட்டுப் புலனாய்வு செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று 2003 இல் அமைச்சரவையா.ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் சுதந்திரம் மீதான அறிக்கையை சட்டவாக்கம் செய்தல்.நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிறைவேற்றுவதற்கும் வடக்கிலும் கிழக்கிலும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அனைத்தையும் ஆயுதங்களைக் களையச் செய்வதற்கும் சட்டம் வலுவுக்கிடுதல் பற்றி அறிக்கையிடுவதற்கும் அரசாங்கத்தாலும் எதிர்க்கட்சியாலும் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மேற்பார்வைக் குழுவொன்றின் நியமனம்.

2011 இல் ஐ.தே.க. வால் செய்யப்பட்டதுபோன்று பொலிஸ் பிரிவுக்குப் புறம்பாக அமைச்சொன்று உடனடியாக தாபிக்கப்படல், தமிழ் பேசும் ஆளணியனரை பொலிஸ் படையில் சேர்ப்பதற்கும் தற்போதுள்ள ஆளணியினரை மும்மொழித் தேர்ச்சியுடையவர்களாக்குவதற்கும் திட்டவட்டமானதும் விரிவானதுமான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்தல் வேண்டும்.வடக்கு பிரதேச இராணுவமயமாக்கப்படுவதை நிறுத்துதல் அத்துடன் வடக்கில் சிவில் நிர்வாகப் பணியை பகிரங்க சேவைக்கு மட்டுப்படுத்துதல்நாட்டின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் தேவையை தங்கள் மனதிற்கொண்டு இராணுவத்திற்குப் புதிய பணியை நிர்ணயித்தல்.

ஆள்புல ஒருமைப்பாட்டின் பாதுகாப்பில் இராணுவத்தின் பணி ஒப்புக்கொள்ளப்படுகின்றது. ஆனால், உயர்மட்ட ஆளணியினருக்கு சன்மானம் வழங்குவது மாத்திரம் போதாது. சேவையாற்றும் எல்லா பதவி வரிசைகளையும் சேர்ந்தவர்களின் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கு ஒரு நிகழ்ச்சித் திட்டம் இருத்தல் வேண்டும்.பொது மக்களின் குறைகளைக் கையாள்வதற்கு தாபிக்கப்படும் விசேட நிறுவனம் பாராளுமன்றத்தில் இரு தரப்பு உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். இது சுயேச்சையான ஒரு நிறுவனமாகவும் சுயேச்சையான பொலிஸ் ஆணைக்குழுவையும் சுயேச்சையான பகிரங்க சேவை ஆணைக்குழுவையும்போன்று அதே அந்தஸ்தையுடையதாகவும் இருத்தல் வேண்டும்.பயனுறுதியுள்ள நல்லிணக்கத்தினை எய்துவதற்கு நிச்சயமாக ஒரு தடையாக இருக்கும் அரசாங்கத்தின் அரசியல் செயல்முறைகளில் ஈடுபாடும் கொண்டவர்களான ஒரு காலத்தில் போராளிகளாக இருந்தவர்களையும் ஆயுதம் தாங்கிய அரசியல் குழுக்களையும் பயன்படுத்துவதில் காப்படைவு கொள்ளாமல் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

அரசியலமைப்பின் 16 ஆம் உறுப்புரையை நீக்கம் செய்து ஐஇஇககீ ஐ எமது சட்டத்தின் ஒரு பாகமாக சேர்ப்பதன் மூலம் அடிப்படை உரிமைகள் பற்றிய அத்தியாயம் வலுப்படுத்தப்படுதல் வேண்டும். பொது மக்கள் பாதுகாப்பு பற்றிய ஙீஙஐஐஐ ஆம் அத்தியாயம் உடனடியாக நெருக்கடிக்கான அதிவிசேட தத்துவங்களை மட்டுப்படுத்தி மீளாய்வு செய்யப்பட வேண்டும். பாதுகாப்பிற்காக தடுத்து வைத்தல் தொடர்பான தத்துவம் அத்தியாயம் இல் குறித்துரைக்கப்படுதல் வேண்டும். அவசரகால ஒழுங்குவிதிகளின் சட்டவாக்கத்தை மீளாய்வு செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று தாபிக்கப்படுதல் வேண்டும் சட்டவாக்கத்தை மீளாய்வு செய்தல், அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் உள்ளூர் அதிகார சபைகளுக்கும் இடையிலான பிணக்குகளைத் தீர்த்தல் என்பன உட்பட அரசியலமைப்பு தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கு அரசியலமைப்பு நீதிமன்றமொன்றைத் தாபித்து அடிப்படை உரிமைகளை நிலைநாட்டல், தற்பொழுது வலுவிலுள்ள சட்டவாக்கத்திற்கு முன்னர் மீளாய்வு செய்யும் முறைமை முற்றிலும் அவசியம் எனக் காணப்பட்டது. சட்டவாக்கத்தின் பின்னர் மீளாய்வு செய்யும் நடைமுறையொன்றை நாம் பலமாக விதந்துரைக்கின்றோம்.

பின்வரும் முகவராண்மைகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு புதிய செயன்முறை அமைப்பொன்றை நிறுவும் அரசியலமைப்புத் திருத்தமொன்று;
(அ )அரசியலமைப்பு நீதிமன்றம்
(ஆ )தேர்தல் ஆணைக்குழு
(இ )பொலிஸ் ஆணைக்குழு
(ஈ) பகிரங்க சேவை ஆணைக்குழு
(உ )உயர்நீதிமன்றம்
(ஊ) மேன்முறையீட்டு நீதிமன்றம்
(எ) மேல் நீதிமன்றங்கள்
(ஏ) பந்தி 9.218 இல் குறிப்பீடு செய்யப்பட்ட விசேட நிறுவனங்கள்
(ஐ )பொலிஸ் பரிசோதகர் தலைமையதிபதி
(ஒ) மனித உரிமைகள் ஆணைக்குழு
(ஓ )பணச் சபை
(ஒள) சட்டத்துறை தலைமையதிபதி
நீதிச்சேவை ஆணைக்குழு பிரதம நீதியரசரையும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரையும் உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதியையும் கொண்டிருத்தல் வேண்டும். இத்திருத்தம் அரசியலமைப்பிற்கான 18 ஆவது திருத்தத்தின் இயைபான உறுப்புரைகளையும் நீக்கம் செய்யும்.
ஆணைக்குழுவால் அக்கறை கொள்ளப்பட்டவாறு அதிகாரப் பகிர்வு இனக் குழுக்களிடையே தீர்வொன்றைக் காண்பதற்குப் பிரதான காரணியொன்றாகும். அரசாங்கம் முதல் சந்தர்ப்பத்திலேயே தற்போதுள்ள அரசியலமைப்பு சார்ந்த ஏற்பாடுகளையும் ஏற்கனவே இடம்பெற்றுவரும் பந்தி 8.224 என்பதிலுள்ள விதப்புரைகளையும் அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களுக்கான பிரேரணைகளை முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.விதப்புரைகளைத் தெளிவாகக் குறிப்பிடப்பட்ட கால வரையறையுடன் விரிவான திட்டமொன்றை அறிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆணைக்குழுவின் இடைக்கால விதப்புரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதையும் ஐ.தே.க. அவதானிக்கின்றது. பாராளுமன்றத்தில் தமது அவதானிப்புரைகளைச் சமர்ப்பித்துள்ள எதிர்க்கட்சிகளால் உடன்பட்டுக்கொள்ளப்பட்ட எல்லா விதப்புரைகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசாங்கம் எல்லா நல்லெண்ணத்தையும் நிலைநாட்டுதல் வேண்டும். இத்திட்டம் 2009 ஆம் ஆண்டில் ஸ்பெயின் துறைமுகத்தில் அரசாங்கத் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமநலவாய விழுமியங்களினதும் கோட்பாடுகளினதும் உறுதிப்பாட்டிற்கு எமது கடப்பாட்டை இறுதியாக நனவாக்க வேண்டும். (இணைப்பைப் பார்க்கவும்) பொதுநலவாயத்தின் ஓர் அங்கமாகிய இலங்கை இந்த உறுதிப்பாட்டிற்கு உரிமையுடைய நாடாகும்

தென் மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகள் தொடர்பிலும்அவற்றில் கற்கும் மாணவ மாணவியர் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கைகளுக்கமைய இம் மாகாணத் தமிழ் மாணவர்கள் உரிய கல்வியைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து குறைகளைக் களைய வழிவகை காணச் செயற்பட வேண்டிய பொறுப்பு தமிழ்க் கல்வி, தமிழர் கல்வி தொடர்பாக சிந்திப்பவர்களது கடமையாகும். உண்மையில் தென் மாகாணத் தமிழ்ப் பாடசாலைகள் தொடர்பில் உரிய கவனத்தை எவருமே உரியபடி செலுத்தவில்லை என்பது கவலைக்குரியது. தென் மாகாணத்தில் அடங்கும் மூன்று மாவட்டங்களான காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகியவற்றில் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்படும் பாடசாலைகள் நாற்பத்து மூன்றில் முஸ்லிம் பாடசாலைகள் முப்பத்து மூன்றும் தமிழ்ப் பாடசாலைகள் பத்தும் அடங்குகின்றன.

பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளான உரிய பாட ஆசிரிய ஆளணி மற்றும் பௌதிக வளப்பற்றாக்குறைகள் பெருமளவில் குறிப்பிட்ட தமிழ்ப் பாடசாலைகளில் இருந்த போதும் அவை வெளிக் கொண்டு வரப்படாதவைகளாகவே உள்ளன. பெருந்தோட்டப் பகுதி மாணவ, மாணவியரைக் கொண்டதாகவே சகல அதாவது மாகாணத்தில் பத்துத் தமிழ்ப் பாடசாலைகளும் உள்ளன. தமிழ்ப் பாடசாலைகளில் மொத்தமாக மூவாயிரத்து மூந்நூறு வரையான தமிழ் மாணவ, மாணவியர் கற்கின்றனர். அதே வேளை பெருமளவிலான தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் மொழிமூலம் கற்பிக்கப்படும் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வியைத் தொடர்வதும் சிங்கள மொழி மூலப் பாடசாலைகளிலும் பெருமளவு தமிழ்ப் பிள்ளைகள் கல்வி கற்பது வெளிப்பட்டுள்ளது.அரசியல் ரீதியாகவோ வேறு எந்த வழியிலோ உரிய வழிகாட்டலின்மையால் கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைய வேண்டி சமுதாயமாகத் தென் மாகாணத் தமிழ் மக்கள் உள்ளனர். தென்மாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகள் உள்ளன என்பது கூட தமிழ்க் கல்விப் புலத்திலுள்ளவர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதே உண்மை நிலை. மறுக்கமுடியாத யதார்த்த நிலை.காலி மாவட்டத்தில் உள்ள நான்கு கல்வி வலயங்களில் தமிழ் மொழி மூலம் கற்பித்தல் இடம் பெறும் பாடசாலைகள் பதினேழாகும். அவற்றில் தமிழ்ப் பாடசாலைகள் நான்கும், முஸ்லிம் பாடசாலைகள் பதின்மூன்றும் அடங்குகின்றன. எல்பிட்டிய, காலி, உடுகம, அம்பலாங்கொடை ஆகிய நான்கு கல்வி வலயங்களில் மேற்படி பாடசாலைகள் அமைந்துள்ளன.

உடுகம கல்வி வலயத்தில் தல்கவெல தமிழ் கனிஷ்ட வித்தியாலயமும் நாக்கியா தெனிய தலங்கா சரஸ்வதி தமிழ் வித்தியாலயமும் உள்ளன. இவ்விரு தமிழ்ப் பாடாலைகளிலும் கல்விப் பொதுத் தராதர வகுப்பு வரை உள்ளதுடன் நானூற்றைம்பது வரையான பிள்ளைகள் தமது கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறே எல்பிட்டிய கல்வி வலயத்திலுள்ள இரு தமிழ்ப் பாடசாலைகளான திவிதுற தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரம் வரை வகுப்புகள் நடைபெறுவதுடன் இகல்கந்த தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் ஐந்நாம் தரம் வரை கொண்ட ஆரம்பப் பாடசாலைகயாகவேயுள்ளது. மேற்படி இரு பாடசாலைகளிலும் முன்னூறுக்கும் கிட்டிய எண்ணிக்கையான மாணவ, மாணவியர் கற்கின்றனர்.
காலி கல்வி வலயத்தில் கணிசமான அளவில் வாழும் தமிழ் மக்களின் பிள்ளைகள் அங்கு ஒரு தமிழ்ப் பாடசாலை இன்மையால் காலி கல்வி வலயத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தமது கல்வியை மேற்கொள்வதுடன் குறிப்பிடத்தக்க அளவு பிள்ளைகள் சிங்கள மொழி மூலம் பாடசாலைகளில் தமது கல்வியை மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.மாத்தறை மாவட்டத்தைப் பொறுத்த வரை தமிழ் மொழி மூலக் கற்பித்தல் நடைபெறும் பாடசாலைகள் பதினெட்டுள்ளன. அவற்றில் ஐந்து தமிழ் பாடசாலைகளும், தமிழ் மாணவர்களைக் கொண்ட இரு மொழி மூல மூலப் பாடசாலையொன்றும் பன்னிரெண்டு முஸ்லிம் பாடசாலைகளும் அடங்குகின்றன. மாத்தறை, அங்குரஸ்ஸ , மொரவக்க , முல்கிரிகல்ல ஆகிய நான்கு கல்வி வலயங்கள் மாத்தறை மாவட்டத்திலுள்ளன.

மொரவக்க கல்வி வலயத்திலுள்ள ஹன்போர்ட் தமிழ்க் கனிஷ்ட வித்தியாலயம், பெவரெலி தமிழ்க் கனிஷ்ட வித்தியாலயம் , எனசல்வத்தை தமிழ் வித்தியாலயம் , அனிங்கந்த தமிழ் வித்தியாலயம் ஆகிய நான்கு தமிழ் பாடசாலைகளும் தமிழ்ப் பிரிவைக் கொண்ட இரு மொழிப் பாடசாலையான புனித மத்தியூஸ் வித்தியாலயமாக ஐந்து பாடசாலைகளும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர வகுப்புகளைக் கொண்ட தமிழ்ப் பாடசாலைகளாக உள்ளன. இவற்றில் புனித மத்தியூஸ் வித்தியாலயத்தில் மட்டும் தமிழ் மொழி மூல உயர்தர வகுப்பில் கலைப்பிரிவு உள்ளது. கலைத் துறையில் பல பாடங்கள் இருந்த போதிலும் தமிழ், இந்து நாகரிகம், புவியியல் ஆகிய மூன்று பாடங்கள் மட்டுமே அங்கு கற்பிக்கப்படுகின்றன. அக்குரஸ்ஸ கல்வி வலயத்தில் கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர வகுப்பு வரை கொண்டதும் முந்நூற்றைம்பது வரையான மாணவ மாணவியரைக் கொண்டதாகவும் உலந்தாவ தமிழ் வித்தியாலயம் செயற்படுகின்றது. அனிங்கந்த தமிழ் வித்தியாலயத்தில் நானூற்றி முப்பத்தி இரண்டு மாணவர்கள் கற்கும் அதே வேளை எனசல்வத்தை தமிழ் வித்தியாலயத்தில் நானூற்றி நாற்பதும், பெவரெலி தமிழ் வித்தியாலயத்தில் நானூற்றி அறுபத்து நான்கும், ஹன்போர்ட் தமிழ் பாடசாலையில் முந்நூற்றி ஐம்பதும், புனித மத்தியூஸ் வித்தியாலயத்தில் நானாற்றி முப்பதுமாக தமிழ் மாணவ, மாணவியர் கற்கிறார்கள்.

இப்பாடசாலைகளில் அதாவது மாத்தறை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளில் பத்துக்கும் மேற்பட்ட ஆரம்பப்பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. அதே போன்று கணிதம், தமிழ், இந்து சமயம் ஆங்கிலம், உடற்கல்வி , விஞ்ஞானம் உட்பட பல பாடங்களுக்கான ஆசிரியர்கள் தமது கல்வியை மேற்கொள்ள வேண்டிய அவல நிலையில் உள்ளனர். உயர் தர வகுப்பு நடைபெறும் புனித மத்தியூஸ் வித்தியாலயத்தில் உயர்தர வகுப்புகளில் மாணவர்கள் கற்கும் மூன்று பாடங்களில் ஒன்றான புவியியல் பாடம் கற்பிக்க ஒரு ஆசிரியரும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. மாத்தறை மாவட்டத்திலுள்ள எந்த வொரு தமிழ்ப் பாடசாலையிலும் ஏதாவது நிகழ்ச்சி நடத்தக்கூடிய ஒரு மண்டபமும் இல்லை. விழா மற்றும் அது போன்ற தேவைகளுக்கும் கருத்தரங்குகள் நடத்துவதற்கும் வாடகைக்கு மண்டபத்தைப் பெறவேண்டிய நிலையுள்ளது.இப்பகுதியிலுள்ள தெனியாய நகரிலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் நடுநாயகமாகவிளங்குவதுடன் தோட்டங்களில் அம்மன் கோயில்கள் பரவியுள்ளன. காலி மாவட்டத்திலும் காலி நகரிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கதிர் வேலாயுத சுவாமி கோயில் போன்றவற்றுடன் தோட்டப் பகுதிகளிலும் பல இந்துக் கோயில்கள் உள்ளன.தென்மாகாணத்திலுள்ள எந்த வொரு கல்வி வலயத்திலும் இந்து சமய பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் எவருமே நியமிக்கப்படவில்லை. அதே போன்று ஏனைய பாடங்கள் தொடர்பிலும் குறைகள் நிறையவேயுள்ளன

மாத்தறை மாவட்டத்தின் குறிப்பாக மொரவக்க கல்வி வலயத்திற்கு ஒரு இந்து சமய ஆசிரிய ஆலோசகர் நியமிக்கப்படுவது அவசிமான தென்பதுடன் அவர் மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளில் பயிலும் இந்து சமய மாணவ மாணவியரின் நலன் தொடர்பான பொறுப்பையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அதே போன்று காலி மாவட்டத்தின் உடுகம, எல்பிட்டிய கல்வி வலயங்களுக்குப் பொறுப்பாகவும் மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளில் பயிலும் இந்து மாணவர் நலனை மேற்பார்வையிடவும் கூடிய பொறுப்பில் இந்து சமய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவதும் அவசியமாகும்.மாத்தறை, காலி மாவட்டங்களிலுள்ள ஒன்பது தமிழ்ப் பாடசாலைகளில் இரு மொழிப் பாடசாலையிலும் தமிழ் மாணவர்கள் குறிப்பாக இந்து சமய மாணவர்களே அநேகமாக பயிலும் போதிலும் மாத்தறை மாவட்ட மொரவக்க கல்வி வலயத்திலுள்ள மூன்று பாடசாலைகளில் மட்டுமே தமிழ் அதிபர்கள் செயற்படுகின்றனர்.இரு மொழிப் பாடசாலையின் தமிழ்ப் பிரிவு உட்பட ஏனைய ஆறு பாடசாலைகளில் முஸ்லிம் அதிபர்கள் செயற்படுவதுடன் ஹன்போர்ட் தமிழ்ப் வித்தியாலயத்தின் அதிபராக தமிழில் போதிய பரிச்சயம் அற்ற பெரும்பான்மை இனத்தவரே அதிபராக உள்ளார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு உட்படாத நிலையில் தென் மாகாணத் தமிழ் பாடசாலைகளது நிலைமையும் அங்கு பயிலும் மாணவ மாணவியர் இலவசக் கல்வி, சமத்துவக் கல்வி, தரமான கல்வி என்ற நாட்டின் கல்விக் கோட்பாடுகளுக்கு அடங்காமலுள்ளமையும் எவராலும் கண்டு கொள்ளப்படாத ஒன்றாகவேயுள்ளது. இது பற்றி எத்தரப்பும் சிந்திப்பதாயில்லை.கல்வித் தரத்தில் உயர் நிலையிலுள்ள காலி, மாத்தறை மாவட்டங்களில் பல்லாயிரம் தமிழ்ப் பிள்ளைகள் உரிய கல்விகளைப் பெற முடியாது அவலப்படுகின்றார்கள். கல்வி புலத்திலுள்ளோர் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காண தமிழ்ப் பிள்ளைகளும் தேசிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு கல்வித் தரத்தில் தமது கல்வியைப் பெற்றுக் கொள்ள வழிவகை காண முன்வர வேண்டும்.தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரிய ஆளணி மற்றும் பௌதிக வளங்களால் தமிழ்ப் பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதுடன் பெற்றோர்களின் பொருளாதாரப் பின்னடைவு, போக்கு வரத்து வசதியின்மை என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தொழிலாளரே நாட்டின் முதுகெலும்பு என்று கோசமிட்டு அவர்களை அணிதிரட்டி சந்தா வசூலித்து அரசியல் நடத்தும் தொழிற் சங்கங்கள் தொழிலாளர் கல்வி விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

தென் மாகாணத் தமிழ்ப் பிள்ளைகளின் கல்விப் பின்னடைவு தேசிய ரீதியில் தமிழ்ச் சமூகத்தின் கல்வியில் பின்னடைவின் ஒரு அங்கம் என்பதை புரிந்து கொண்டு தென் மாகாணத் தமிழ், தமிழர் கல்வி மேம்பாடு தொடர்பில் பொறுப்புடன் சிந்தித்துச் செயற்பட கல்வி ஆர்வலர்களே முன்வர வேண்டும். பொறுப்புணர்ந்து காலம் தாழ்த்தாது கல்வி தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டால் அது ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமே அவலத்தை ஏற்படுத்த இடமுண்டு. இந்நிலையிலேயே காலி மாவட்டத்திலுள்ள ஒரு தமிழ்ப் பாடசாலையையும் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஒரு பாடசாலையையும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தர வகுப்புகள் கொண்ட பாடசாலைகளாகத் தர முயர்த்தி தேவையான அனைத்து வளங்களும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

Mittwoch, 8. Februar 2012


இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சனத்தொகை குறைவாயிருப்பதால் சிறுபான்மையினர் என்றும் சிங்கள மக்கள் சனத்தொகை கூடுதலாயிருப்பதால் பெரும்பான்மையினர் என்றும் இனத்துவ ரீதியாக வேறுபடுத்தப்பட்டிருக்கின்றதல்லவா? கூடவே, சிறுபான்மையினரை சிங்கள மொழியில் "சுலுஜாதிக்க' என்றும் பெரும்பான்மையினரை "மகஜாதிக' என்றும் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கங்கள் அடையறீளப்படுத்தி "சுலு ஜாதிக்க' மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடக்கி ஆள்வது தான் தமது வகிபாகம் என்ற பிற்போக்கான சிந்தனையில் செயற்பட்டு வந்துள்ளன. அதாவது, சிங்கள பெரும்பான்மை இனம் ஆளும் இனம் என்றும் சிறுபான்மை இனங்கள் ஆளப்படும் இனங்கள் என்றும் துருவப்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டது.

ஆளும் வர்க்கங்களின் பிரதான ஆயுதம்எனவேதான், ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து நாட்டு மக்கள் வர்க்க ரீதியாகவோ, சமூக பொருளாதார ரீதியில் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் துன்ப துயரங்களுக்கு முகம்கொடுக்கும் அனைத்து இன மக்கட் பிரிவினர் என்ற ரீதியாகவோ கைகோர்த்தது அணிதிரள்வதற்கு இடமில்லாதவாறாகவே சிங்கள மேலாதிக்கம் கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. இந்த வகையில் சிங்கள இனவாத, முதலாளித்துவ சக்திகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் ஆட்சியைத் தக்க வைப்பதற்கும் இதனைத் தமது பிரதான ஆயுதமாகப் பயன்படுத்தி வந்துள்ளன. "இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையோ, சாந்தி சமாதானத்தையோ ஏற்படுத்த வேண்டிய பணியை மாறி மாறி பதவிக்கு வந்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.சு.க.தலைமையிலான அரசாங்கங்கள் புழுதியில் எறிந்ததன் விளைவாகவே கால் நூற்றாண்டு கால பாரிய அழிப்பு யுத்தத்திற்கும் என்றுமில்லாதளவு கடன் சுமைக்கும் நாடு இட்டுச் செல்லப்பட்டது.

இலங்கை அரசு பெரும்பான்மை இனத்தின் சொத்தா?
அன்று 1956 இல் சிங்களம் மட்டும் சட்டத்தினை இயற்றியதன் மூலம் இலங்கை அரசு பெரும்பான்மை இனத்தின் சொத்து என்று அரசியல் வடிவம் கொடுத்தவர். ஆயினும், சிங்கள மேலாதிக்கம் மென் மேலும் வீறு கொண்ட நிலையிலேயே அவர் அடுத்த கட்டமாக பண்டாரநாயக்கசெல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தவர். பின்பு தனது உயிரையும் சோமராம தேரரின் துப்பாக்கி வேட்டுக்கு இரையாக்கியவர். பண்டாரநாயக்க 1956 ஏப்ரல் மாதம் பதவிக்கு வந்து 3 1/2 வருடத்திற்குள் இவையாவும் நடந்து முடிந்துவிட்டன.

1972 இல் பண்டாரநாயக்காவின் துணைவியார் சிறிமாவோ ரத்வத்த விலைபோன பழைய இடதுசாரிகளின் துணையுடன், சாதாரண சட்டமாயிருந்த "சிங்களம் மட்டும்' சட்டத்தை அரசியலமைப்பு சட்டமாகத் தரமுயர்த்தியதோடு, பௌத்தம் அரச மதம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம் அரசுக்கும் மதத்திற்கும் மணம் முடித்து வைத்தவர்.இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அரசு ராஜபக்ஷ குடும்பத்தின் சொத்து, நாட்டின் இறைமையும் அத்தோடுள்ளது என்ற மிடுக்கு தலைவிரித்தாடுகிறது. நாட்டின் பிரகடனப்படுத்தாத தலைநகரமாக அம்பாந்தோட்டை கட்சிப்படுத்தப்படுகிறது. இத்தகைய பின்புலத்திலேயே குறிப்பாக புரையோடிப் போயுள்ள தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பொறுத்து, "காணி அதிகாரம் தரமாட்டேன், பொலிஸ் அதிகாரம் தரமாட்டேன்' என்றெல்லாம் எதேச்சையாக ஜனாதிபதி ராஜபக்ஷ முழங்கி வருவதைக் காணலாம். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாகப் பத்திரிகையாளர் மாநாட்டில் கிருஷ்ணா அறிவித்தது தொடர்பாக எழுந்த வாதப்பிரதிவாதங்களுக்கு நன்கு தெரிந்தவையாகும்.

30.01.2012 ஆம் திகதி அலரி மாளிகையில் ஊடகத்துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்த போது, தான் இந்தியாவுடனேயே 13+ விடயத்தை ஆராய்ந்ததாகவும் வடக்கு கிழக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் தான் பென்தர ஆற்றுக்கப்பால் செல்ல முடியாத நிலைமை உருவாகிவிடும் என்று பரந்துபட்ட சாதாரண சிங்கள மக்களைக் குழப்பிவிடும் குதர்க்கமும், காணி அதிகாரத்தைப் பொறுத்து இறுதி அதிகாரம் ஜனாதிபதியின் கையிலேயே இருக்கும் என்பதும் ஜனாதிபதி ராஜபக்ஷவினாலும் ஏனைய அரசாங்க முக்கியஸ்தர்களாலும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அதாவது, அர்த்தமுள்ளதும் சாதாரண ஜனநாயக நடைமுறைக்குட்பட்டதுமாகிய அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வுக்கு தனது தலைமையிலான அரசாங்கம் தயாராயில்லை என்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். 13+ தீர்வு வரை அரசாங்கம் செல்லத் தலைப்படுமாயின் தாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறிவிடப்போவதாக "ஜாதிக்க ஹெல உறுமய' (ஜே.எச்.யூ.) தலைவர், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணி (என்.எவ்.எவ்.) தலைவர், அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் எச்சரித்துள்ளனர். இவர்களது நிகழ்ச்சி நிரலுக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். எனவே இவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையானது ஒரு பம்மாத்து என்பதைப் புரிந்துகொள்வது ஒரு சிறுபிள்ளைக்கும் கடினமாயிராது.

மேலும் ஊடகத்துறையினருடனான மேற்குறித்த சந்திப்பின் போது, ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ.) தரப்பினரை வெகுவாகச் சாடியுள்ளார். அதாவது, த.தே.கூட்டமைப்பு தரப்பினர் அரச தரப்பினருடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நேர்மையாக நடந்துகொள்ளவில்லையென்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் பாணியில் நடந்துகொள்வதாகவும் வழக்கம் போல் வாய்ப்பாடாகக் கூறியுள்ளார். அதாவது, தமிழர் தரப்பினர் இறையாண்மையற்றவர்கள், கொடுப்பதை எடுக்க வேண்டும் என்றொரு அரசியல் வங்குரோத்துத்தனத்தின் வாயிலாயெழுந்த அகங்காரமே பேசுகின்றது.

ஊடகத்துறையினரிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் ஊடகவியலாளர்கள் இன வாத ரீதியில் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். அது முதல் தடவையுமல்ல. இத்தகைய பல விடயங்கள் வெறுமனே பழக்கதோஷமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன எனலாம். ஏனென்றால் அவர் எதையாவது குறிப்பானதாகச் சுட்டிக்காட்டவில்லை. அதேநேரத்தில் சிங்கள ஊடகங்களோ, சில ஆங்கில ஊடகங்களோ எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பது பற்றி அவர் எதுவித குற்றச்சாட்டையும் வெளிப்படுத்தியதாக நாம் அறியவில்லை.
அரசாங்கம் ஏன் தடுமாறுகின்றது.

அரசியல் ரீதியாகவும் பொருளாதார துறையிலும் ராஜபக்ஷ அரசாங்கம் தடுமாறிக் கொண்டும் அங்கலாய்த்துக் கொண்டும் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, இம்மாதம் 27 ஆம் திகதி ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வுகளைப் பொறுத்தவரை அரசாங்கம் கலக்கமடைந்திருப்பது தெரிகிறது. அந்த வகையிலேயே அமெரிக்கா வெளிப்படுத்திய நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிப்பதற்கு ஒரு தூதுக்குழு வாஷிங்டன் விரையவேண்டுமென்று சென்ற வார மந்திரி சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார். மேற்படி மனித உரிமைகள் சபையின் சென்ற தடவை அமர்வின் போது "தருஸ்மன் அறிக்கை' என அழைக்கப்படும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையானது ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது. அவ் அறிக்கையை இலங்கை அரசு தரப்பினால் நிராகரிக்கப்பட்டது. அதற்கு மாற்றீடாகத் தயாரிக்கப்பட்டதாகிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (ஃஃகீஇ) அறிக்கை மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் அமர்வுகளின் போது சமர்ப்பித்து ஆராயப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்றவாரம் வெளிவிவகாரங்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஃஃகீஇ அறிக்கை அவ்வாறு சமர்ப்பிக்கப்படமாட்டாதென அறிவித்தார்.

மறைப்பதற்குப் பல விடயங்கள் இருப்பதாலேயே அவ் அறிக்கைக்கு இருட்டடிப்புச் செய்யப்படுவதாக யாரும் எண்ணுவது இயல்பானதே. அமைச்சர் பீரிஸ் ஜனாதிபதியின் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும் நோக்கில் சில சந்தர்ப்பங்களில் கோமாளித்தனமாகக் காய்கள் நகர்த்துவதுண்டு. அமைச்சர் பீரிஸ் அறிக்கை விடுத்து இரண்டு நாட்கள் கழிந்ததும் அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா ஊடகவியலாளர்களுடனான வாராந்த சந்திப்பின் போது, மேற்படி அறிக்கை எதிர்வரும் ஜெனீவா அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே, அரசாங்கம் எவ்வளவு தூரம் குழம்பிப்போயுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இதனிடையில் ஃஃகீஇ அறிக்கையானது முழுமையாக அமுல் செய்யப்படுமென 64 ஆவது ஆண்டு சுதந்திர உரையில் ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியளித்திருப்பது சர்வதேச சமூகத்திற்குத் தீனியாகவே கருதப்பட வேண்டியுள்ளது. இது பற்றி பின்பு விபரமாகப் பார்ப்போம்.

அடுத்ததாக நாட்டின் பொருளாதார நிலை மென்மேலும் கவலைக்குரியதாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வுக்குழு சென்றவாரம் தெரிவித்துள்ளதைக் காணலாம். குறிப்பாக வர்த்தக சமநிலை பெரிதும் எதிர்மறையாயுள்ளது. இறக்குமதிச் செலவீனங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. கடன் தொகை கட்டுகடங்காமல் உள்ளது என்றெல்லாம் தூதுக்குழுத் தலைவர் கலாநிதி பிறயன் அற்கன் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். ரூபா மேலும் மதிப்பிறக்கும் செய்யப்பட்டு வட்டி விகிதத்தை அதிகரிப்பதும் அவசியம் என்றுஅவர் கூறியுள்ளார். அதனையடுத்து மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடன்கள் வழங்குவதை அதிகளவில் குறைத்துவிடுமாறும் வட்டி வீதத்தை அதிகரிக்குமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு காண வேண்டும். அதன் மூலம் நாட்டில் உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டைத் துரித கதியில் இராணுவமயப்படுத்திச் செல்வதை நிறுத்த வேண்டும், விரலுக்குத் தக்க வீக்கம் என்பதை முற்றாக மறந்துவிடாது தாங்க முடியாத கடன்களைப் பெற்று பல்வேறு டாம்பீக செலவீனத் திட்டங்கள் இனிமேலாவது நிறுத்த வேண்டும். அப்படியென்றால் தான் நாட்டைக் காப்பாற்றி ஓரளவேனும் முன்னேறிச் செல்வதற்கான வழி சமைக்க முடியும்

Freitag, 3. Februar 2012


சீனாவுக்குத் தேவையான மூல வளங்கள் எடுத்துச் செல்லப்படும் பாதைகளில் தனது இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலுகிறது அமெரிக்கா.லிபியாவை மறு கொலனியாக்கி புதிய உத்தியுடன் ஆபிரிக்கக் கண்டத்தில் தனது கொலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப் பொருட்களை பெறுவதை முடக்குவது. இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம் கிளம்பியுள்ளது.

கடந்த நவம்பரில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு அவுஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்ளும் என்றும் அத்துடன் அவுஸ்திரேலியாவின் இதர விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க வரிவாக்கமாகும்.

மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதிஇறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக மேற்காசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத் தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு அவுஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால் தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர இந்தியப் பெருங்கடலில் உள்ள அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.

மலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக் கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டு செல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும் அமெரிக்காவுடன் மோதல் போக்கைத் தவிர்க்கும் நோக்கத்துடனும் மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல் தரை வழியே எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியன்மாரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறை முகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரை வழியாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரை வழி எண்ணெய்க் குழாயை சீனா பதித்து வருகிறது. 2013 இல் நிறைவேறவுள்ள சீனாவின் இப் பெருந்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மாரை தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசுச் செயளாலரான ஹிலாரி, மியான்மாருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கி யையும் அந்நாட்டின் அதிபர் தியன் சியன் ஐ யும் சந்தித்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியன்மாருக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.

மியன்மாரில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிப்பதாகக் கூறப்பட்டாலும் உண்மையில் சீனாவில் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த் தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மாரின் அணு சக்தி திட்டத்தை சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேகாங் நதியின் கீழ்ப் பகுதி நாடுகளுடன் அதாவது வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட 2009 இல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட கீழ் மேகாங் முன்முயற்சி என்ற கூட்டமைப்பில் மியன்மாரையும் சேருமாறு நிர்ப்பந்திக்கிறது.

ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர் இப்போது மியான்மார் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியன்மாரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெரு முதலாளிகளின் சங்கமான ஃபிக்கி பூரிக்கிறது. இவை ஒரு புறமிருக்க கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்ஸுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தாய்வானுக்கு மிகப் பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மேலும் அண்மையில் சீனாவின் நட்பு நாடான வடகொரிய அதிபரின் மறைவையடுத்து எல்லையில் படைகளைக் குவித்துப் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விசுவாச நாடான தென்கொரியா இவையனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க இராணுவ பொருளாதார மேலாதிக்கத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்காவின் போர்த் தந்திரத் திட்டத்தின்படி அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, இராணுவ உறவுகள் அண்மையில் விரிவடையத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் 7 ஆம் திகதியன்று இந்தியாவுக்கு வருகை தந்த அவுஸ்திரேலியாவின் இராணுவ அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் உள்ள தடைகளை அவுஸ்திரேலிய அரசு அகற்றி விட்டது என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் அணு ஆயுத இருப்பு சீனாவுக்கு ஒப்பானதாக வரவேண்டும் என்பதே யுரேனிய விற்பனையின் நோக்கம் என்றும் அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின் ஏழாம் கடற்படையுடன் இந்திய, அவுஸ்திரேலிய கடற்படைகள் முக்கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியாவும் அவுஸ்திரேலியாவுமாகும். சீனாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தான் இம் மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் மறுத்த போதிலும் அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்தத் திசையை நோக்கித் தான் உள்ளன.

இவையனைத்தும் அமெரிக்காவின் போர்த் தேரில் இந்தியா பிணைக்கப்படிருப்பதையும் சீனாவைச் சுற்றி வளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று அமெரிக்கா கூறுவதன் பொருள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச் செயற்பட வேண்டும் என்பது தான். ஏற்கெனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும் கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும் அமைதிப்படை என்ற பெயரில் பல ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்து வரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும். தற்போது வியட்நாமில் உரிமை கோரப்பட்டுள்ள தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக்காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங்கள் தெற்கு தென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. இந்தியாவின் அணு சக்தித் திறன் கொண்ட அக்னி 5 ஏவுகணை சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில் ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைச்சாற்றுவதாகக் காட்டிக் கொண்டு சீன எதிர்ப்பை உசுப்பி விடுகின்றன.

இந்நிலைமைகள் ஒருபுறமிருக்க அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமிடையே அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. விசுவாச நாடாக இருந்த போதிலும் பாக்.கின் பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள வஜிரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும் ஆளில்லா விமானத் தாக்குதலாலும் பாக். மக்களின் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர்.

இந் நிலையில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால் மக்களின் பொதுக் கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான உணவு மற்றும் ஆயுத விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன் விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக். அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு, ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது. இனி பாக். மீது அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார் அந் நாட்டின் இராணுவத் தளபதியான கயானி. மறுபுறம் பாக். இராணுவக் கும்பலுக்கும் சிவிலியன் அரசாங்கத்துக்குமிடையிலான அதிகாரப் போட்டியும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அபாயமும் நீடிப்பதால் அந்த நாட்டில் தீராத குழப்பமும் நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது. அமெரிக்காவுக்கு நீண்ட காலம் விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான் மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந் நாட்டை உருக்குலைத்திருக்கும் போது , இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளி விட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி தெற்காசியாவில் வல்லரசாக விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.

Donnerstag, 2. Februar 2012


இந்திய வெளிவிவகார அமைச் சர் எஸ். எம். கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் காரணமாக ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றென பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக என வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கு புத்துயிர் ஏற்பட்டுள்ளமையினைக் கூறலாம். அவர் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது இறுதியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிக்கை விடுத்த போது பதின்மூன்றாவது யாப்புத்திருத்தத்தின் மூலமாக மாகாணங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகார பரவலாக்கத்தினை மேம்படுத்த ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாகக் கூறினார். அப்போது இத்தகைய மேம்பாட்டினை இலங்கை அரசாங்கம் செய்து முடிக்க காலவரையறைக்கு ஏற்றுக் கொண்டுள்ளதா? என வினவிய போது அவ்வாறு அரசாங்கம் ஏதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை கூறுவதற்கு திரு. கிருஷ்ணாவுக்கு தர்மசங்கட நிலை ஏற்பட்டது. இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒருமுறை பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாகவே தோன்றுகின்றது. அதற்காக அது பிரச்சினையினை தீர்ப்பதற்கான அண்மித்த நிலைக்கு வந்து விட்டது எனக் கருதவும் முடியாது.

தமிழ் மக்களது மனக்குறைகளை தீர்த்து வைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றினை ஏற்படுத்த வேண்டும் என்பதனை இந்திய அரசாங்கம் ஆர்வத்துடன் தொடர்ந்தும் கூறி வருகின்றது. 1987 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை உருவாக்குவதில் இந்தியா மு.க்கிய பங்காற்றியது என்ற வகையில் அந்நாடு 13 ஆவது திருத்த சட்டத்தின் மீது குறிப்பிடத்தக்க வகையில் ஆர்வம் கொண்டுள்ளது. யுத்தம் முடிந்து இரண்டரை வருடங்களாகியும் கூட அதிகார பரவலாக்கத்தினை உள்ளடக்கிய வகையிலான ஒரு அரசியல் தீர்வினை கொண்டு வருவதற்கு ஏதுவான ஆக்க பூர்வமான ஏற்பாடுகள் ஏதும் குறிப்பிடத்தக்க வகையில் இன்னும் ஏற்படவில்லை. அதிகார பரவலாக்கத்திற்கு பதிலாக பாராளுமன்றத்தில் ஏற்படுத்தக்கூடிய செனற் சபை அல்லது மேல் சபை என்று மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்குமிடையே ஒரு பாலமாக அமையலாம் என இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது பெருமளவான பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியதன் காரணமாக அரசாங்கத்தின் மீது அவற்றைத் தவிர்க்குமாறு அப்போது பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டிருந்தன.இவற்றைச் சமாளிக்கும் நோக்குடன் ஜனாதிபதி ராஜபக்ஷ யுத்தம் முடிவுற்றதன் பின்னர் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக உரிமை வழங்கல் என்னும் ஒரு கோட்டினை முதன் முதலாக உருவாக்கியிருந்தார். இக்கோட்பாட்டினை மேலும் திருத்தும் நோக்கத்துடன் பதின்மூன்றாம் திருத்தத்துடன் இன்னும் ஒன்று என தனது கோட்பாட்டினை ஜனாதிபதி திருத்திய போது மேலதிகமானது மற்றும் மேலதிகமான ஒன்று என்பவற்றினைப் பொறுத்து எதுவித திருப்திகரமான அல்லது ஆக்கபூர்வமான கருத்து விளக்கமும் கூறப்படவில்லை. இவ்வாறாக ஆக்கபூர்வமான கருத்துக்கள் ஏதும் இல்லாத நிலையில் மேலே கூறப்பட்ட கோட்பாடுகள் (ஜனாதிபதியின்) இதுவரை காலம் மாகாணங்களுக்கு கிடைக்கக் கூடியாதாயிருந்த அதிகாரங்களை விடக்கூடிய வகையில் மேலதிக அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்னும் ஒரு அர்ப்பணிப்பினைக் கொண்டதாக அமையலாம் என அனுமானித்து அர்த்தம் கொள்ளப்பட்டது. அரசாங்கத்திற்கு எதிராக யுத்தம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போது பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை.தெளிவற்ற கோட்பாடுபதின்மூன்றாம் திருத்தச் சட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மட்டுமே"போதியதல்லாதது' எனக் கருதப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு"முதல் அமைச்சர்களாக' மாகாணங்களில் பதவியேற்றவர்களும் கூட தமது கடமைகளை நிறைவேற்றும் போது அப்பதவிக்கு உள்ள அதிகாரப் பற்றாக்குறை பற்றிய குறைபாடுகளைப் பற்றி பெரிதும் கசப்புணர்வுடன் கருத்துக்களைக் கூறியுள்ளனர். மாகாண சபைகள் நிதியைப் பொறுத்து முற்றாக மத்திய அரசாங்கத்தில் தங்கியிருக்க வேண்டியது 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மிக முக்கியமான குறைபாடாகும். மாகாண சபைகளால் தமக்கு தேவையான நிதியினை சேகரிக்கக் கூடிய அதிகாரங்கள் ஏதும் இல்லாது வரையறைகளுக்குள்ளாகியுள்ள மையால் எதுவித நம்பிக்கையுமின்றி முற்றாக மத்திய அரசாங்கத்தில் தங்கியிருக்க வேண்டியதாக உள்ளது. மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண நிருவாகத்திற்கும் இடையேயான பொறுப்புக்கள் / அதிகாரங்கள் தொடர்பான ஒப்புக் கொள்ளப்பட்ட அட்டவணைகளிலும் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ளன. அதிகாரம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமைகளில் மத்திய அரசாங்கம் அவற்றை தனியுரிமையாக்கிக் கொள்வதே நடைமுறையில் யதார்த்தமாக காணப்படுகிறது.

யுத்தத்தினால் ஏற்படக் கூடிய மனித உயிர்களின் இழப்புக்களும், அழிவுகளும் தொடர்பாக அக்கறையும், கரிசனமும் கொண்ட தரப்பினருக்கு ஜனாதிபதியினது உறுதி மொழியான யுத்தத்தின் பின்னரான பதின்மூன்றாம் திருத்தமும் மேலதிகமானதுமான அதிகாரங்களும் என்னும் கோட்பாடு கவர்ச்சிகரமான மீள் உத்தரவாதமாக தோன்றியது. அதில் வியப்பேதுமில்லை. தமிழ் நாட்டிலிருந்து இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அது இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்வதற்கு உதவி செய்ததாக கூறி குற்றஞ்சாட்டி பெரும் அழுத்தங்கள் ஏற்பட்டுக் கொண் டிருக்கும் சந்தர்ப்பத் தில் இவ்வுறுதி மொழி இந்திய மத்திய அரசாங்கத் திற்கு பெரும் பயனுள் ளதாகும். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் படி 13 ஆவது திருத்தம் வடிவமைக்கப்பட்டிருந்ததன் காரணமாக இப்போது 13 ஆம் திருத்தமும் அதற்கு மேலதிகமாகவும் அதிகாரங்கள் வழங்கப்படும் என்னும் உறுதி மொழியும் தமிழீழ புலிகளை ஒழித்துக்கட்ட இந்தியா பங்களித்தது என்னும் பழியினை துடைப்பதாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டிய பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பலவீனங்களையும் நீக்கி பலமடையச் செய்து அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு தடையேதும் இருக்காது என்ற ஜனாதிபதியின் உறுதி மொழி மக்களால் வரவேற்கப்படும்.

இருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டி இரண்டரையாண்டுகள் முடிந்த "பின்னரும்' 13 ஆவது திருத்தச் சட்டமும் மேலதிகமான அதிகாரங்களும் என்ற உறுதி மொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது கவலைக்குரியதாகும். அதைவிட அவ்வுறுதி மொழிக்கு முரண்பாடான வகையில் மாகாணங்களுக்குரிய அதிகாரங்களும் குறைக்கப்பட்டு வருகின்றமை முரண்பாடான ஒரு போக்காக உள்ளது. 18 ஆவது திருத்தச் சட்டமானது ஜனாதிபதி பதவியில் மேலதிக அதிகாரங்களை மையப்படுத்தியுள்ளதுடன் நாட்டின் பல்வேறு நிறுவனங்களுடன் பகிரப்பட்டிருந்த அதிகாரங்களும் கூட இப்போது அகற்றப்பட்டுள்ளன. இவை மாத்திரமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதால் நாட்டில் அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை என அரசாங்கத் திணைக்களங்களில் கூறப்பட்டுள்ளன. இன்னும் சிலர் அதிகாரப் பரவலாக்கத்தை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் கூட பேச ஆரம்பித்து விட்டனர். அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் தமது அரசாங்கம் தீர்மானிக்கும் எதையும் தடை செய்யக்கூடிய நிறுவன அமைப்புக்கள் எதுவும் நாட்டில் இருக்கக் கூடாதென விரும்புகின்றனர்.

களநிலை மாற்றங்கள்இந்திய வெளிவிவகார அமைச்சரது வரவின் காரணமாக மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கம் அதிகரிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மீண்டும் விவாதப் பொருளாக உருப்பேற்றுள்ளனவே தவிர அதனை விடுத்து வேறெந்த முன்னேற்றத்தையும் கண்டதாக இல்லை. திரு. கிருஷ்ணா இலங்கையிலிருந்த போது அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றினை அமைத்து இன முரண்பாடுகள் தொடர்பான அரசியல் தீர்வுகளை காண்பதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக செயற்பட நியமிக்க விரும்பியமைக்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார். தமிழர் தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் தம்மால் அரசாங்கத்துடன் பேசி ஒரு கருத்தொருமையினை எட்டமுடியாதிருக்கும் ஒரு துரதிர்ஷ்ட நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு கட்சியினருடனும் பேசி எவ்வாறு கருத்தொற்றுமைக்காக இசைவினை பெற முடியும் என எழுப்பப்பட்ட வினா மிக முக்கியமானதும் பொருத்தமானதுமான வினாவாகும். சர்வகட்சி பிரதிநிதிகள் குழு கடந்த நான்கு வருடங்களில் 128 முறை கூடி வெளியிட்ட இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு என்னவாயிற்று என்பதே தெரியவில்லை. அந்த அறிக்கைக்கு ஏற்பட்ட இவ்வாறான நிலலமை காரணமாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு என்ன நடக்கலாம் என்பது பிரதி எதிர்மறையற்ற கருத்துகளுக்கு வழியில்லாதுள்ளது.

இவ்வாறான ஒரு சூழலில் நாட்டின் இன முரண்பாடுகளை தீர்த்து வைக்கக்கூடிய வகையினதான அரசியல் சீர்த்திருதத்திற்கான சாதகமான வாய்ப்புக்களுக்கோ அதிகார பரவலாக்கத்திற்கோ அல்லது ஒரு அரசியல் தீர்வுக்கோ எதிர்காலம் பெரிதும் மந்தமாகவே காணப்படுகின்றது. இவ்வாறான விளைவுகள் எதிர்காலத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஒரு வெகு தொலைவிலேயே காணப்படுவதாக தென்படுகிறது. இந்திய அமைச்சரின் விஜயத்தின் போது கூறப்பட்டவை வாய்ப்பேச்சுக்களும் உணர்வு பூர்வமான யுகமாகவே தோன்றுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என எண்ணுபவர்கள் நடைமுறையில் அம்மக்களது இன்றைய யதார்த்த வாழ்வில் நிலவும் திட்டவட்டமானதும் ஆக்கபூர்வமானதுமான களநிலை நிலைவரத்தினை முக்கியப்படுத்தி மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதே அத்தியாவசியமாகும். யுத்தத்தினால் இடப்பட்ட பெயர்வுக்கு ஆளாகிய மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புதலும் வீட்டு வசதிகளை வழங்குவதுமே மிக அத்தியாவசியமான பணிகளாகும். இவ்வாறாக வடக்கு கிழக்கு மக்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மீள் புனருத்தாரணம் ஏற்பட சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவினை வழங்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இம்மக்களுக்காக 50, 000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இந்திய அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளமை ஒரு எடுத்துக்காட்டான செயலாகும். மனமாரப் பாராட்டப்பட வேண்டியதுமாகும்.

அடுத்த முக்கியமான தேவை வடக்கிலும் கிழக்கிலும் இராணுவம் வகிக்கும் பங்கு தொடர்பானதாகும். குறிப்பாக வட மாகாணப் பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் தீர்மானங்கள் தொடர்பாக முடிவு செய்யும் பங்கினை இராணுவம் வகிக்கிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினரை வலுப்படுத்தவும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவே இராணுவம் அங்கே நிலைகொண்டிருப்பதாக பொதுமக்கள் உணருவதாக இருக்க வேண்டுமே ஒழிய அம்மக்களை அவர்கள் ஆட்சி செய்வதாக கருதுவதாக இருக்கக்கூடாது. அம்மக்களுடைய சனநாயக பெறுமானங்களை பாதுகாத்து அவை நிலைத்து நிற்க உதவுபவர்களாகவும் இருக்க வேண்டும். இராணுவத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்காக இராணுவத்தின் முகாமைத்துவமும் அவர்கள் காணத்தவறியவை தொடர்பாகவும் மாற்றங்கள் தேவையாக உள்ளன. அங்கே வாழும் மக்களது பிரதிநிதிகளது குழுக்களாவது இராணுவம் பொறுப்புக் கூறுவதாக செயற்பட வேண்டும். கால தாமதத்தை ஒழித்து இயன்றளவு விரைவாக இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து கொண்டு அப்பகுதிகளில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் பேணுவதற்கான பொறுப்புக்களை கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளனவா பொலிஸ் துறையிடம் கையளிக்க வேண்டும். அரசியல் தீர்வு தொடர்பான பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டிய அதே நேரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது அன்றாட வாழ்க்கை நிலையினையும் தரத்தினையும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் சமகாலத்தில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

Donnerstag, 19. Januar 2012


அமெரிக்க உலகத் தலைமையை நீட்டித்து வைத்துக்கொள்ளுதல் 21 ஆம் நூற்றாண்டுப் பாதுகாப்பில் முன்னுரிமை என்று கடந்த வாரம் வெளியிடப்பட்ட பென்டகனின் புதிய மூலோபாய வழிகாட்டி, அமெரிக்க போர்த் திட்டத்தில் சீனாவை உறுதியாக மையத்தில் நிறுத்துகிறது. ஜனாதிபதி ஒபாமா பதவியேற்றத்தில் இருந்து மத்திய கிழக்கில் இருந்து ஆசியாவிற்கு அமெரிக்க வெளியுறவு இராணுவக் கொள்கை மாற்றப்பட்டுள்ளதை இது முறைப்படுத்துகிறது.

அமெரிக்கப் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்கள் மேற்கு பசுபிக் மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வரை' பரவியுள்ள நிகழ்வுகளுடன் தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளது என்று ஆவணம் அறிவிக்கிறது. "இது நாம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நம் சீரமைப்பு முறையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அடையாளம் காட்டுகிறது' என்றும் அது குறிப்பிட்டுள்ளது. மேலும் அமெரிக்க இராணுவ உடன்பாடுகள், பங்காளித்தனங்கள் ஆகியவற்றின் வலைப்பின்னல்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா "ஒரு பிராந்திய பொருளாதார நங்கூரம் எனவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் என்னும் பரந்த பகுதியில் பாதுகாப்பை வழங்கக்கூடியது' என்றும் தெரிவிக்கிறது.

அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் ஒரே நாடு சீனாதான் என்றும் "அது பிராந்தியத்தில் மோதல்களைத் தவிர்ப்பதற்கு அதன் மூலோபாய நோக்கங்களை இன்னும் அதிகமாகத் தெளிவுபடுத்த வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து "உலகத்தின் பொதுப் போக்குவரத்துப் பாதைகளை அணுகும் உரிமையைப் பாதுகாக்கும்' என்றும் ஆவணம் அறிவிக்கிறது. "சுதந்திரமான கடல்பயணம்' என்னும் தலைப்புரையில் அமெரிக்கா ஏற்கனவே தென் சீனக் கடலில் சீனாவின் கடற்பயண உரிமைகளை இந்த மூலோபாய நீர்நிலைகளில் சவால் விடும் வகையில் பெரிதும் பதற்றங்களை அதிகரித்துள்ளது.

ஆசியாவில் பென்டகனின் இராணுவச் சார்புமாற்றம், ஆசியா மற்றும் சர்வதேச அளவில் பெருகிவரும் சீனப் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கை ஆக்கிரோஷமான முறையில் அமெரிக்க இராஜதந்திர வழித்தாக்குதல் மூலம் வெட்டுவதற்கான முயற்சிகளுடன் இணைந்து வந்துள்ளது. சக்திவாய்ந்த அமெரிக்க அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை இயற்றும் பிரிவுகள் 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதிப் பதவிக்கு ஒபாமாவை ஆதரித்த காரணம் சீனா தனது நிலையில் ஏற்றம் கொண்டுள்ளது. அமெரிக்காவோ ஈராக், ஆப்கானிய போர்கள் என்று புஷ் நிர்வாகம் நடத்தியதால் சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளது என்ற ஆழ்ந்த கவலையினால்தான்.கடந்த நவம்பர் மாதம் "அமெரிக்க மறுசார்பு' என்ற தலைப்பில் வெளியுறவுக் குழுவின் தலைவரான ரிச்சர்ட் ஹாஸ் எழுதிய கட்டுரையில் இந்த உணர்வுகள் ஒலிக்கப்பெற்றன.அமெரிக்கா மத்திய கிழக்கில் அதிகமாக ஈடுபட்டுள்ளது... கிழக்கு ஆசியா அல்லது பசுபிக் குறித்து அது போதுமான கவனத்தைக் கொடுக்கவில்லை. அப்பகுதியில் தான் இருபத்தியோராம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி எழுதப்படும் "என்று அவர் எச்சரித்தார். ஒபாமாவின் கீழ் "ஆசியா மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதை' வரவேற்ற அவர் "இப்பிராந்தியத்தின் பொருளாதார முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவது கடினம்' என்று அறிவித்து,"சீனா அதன் பெருகிவரும் பலத்தை அழுத்தம் தருவதற்குப் பயன்படுத்த முயலாமல் இருக்க அமெரிக்க உறுதிப்படுத்த வேண்டும்' என்றும் சேர்த்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் 2008/09 உலக நிதிய நெருக்கடிக்கு நடுவே, ஒபாமா நிர்வாகம் உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்க அரசாங்க பத்திரங்களை வைத்திருக்கும் சீனாவுடன் சுமுகமாகச் செல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டது. ஆனால், விரைவில் அமெரிக்கா அனைத்து முனைகளிலும் தாக்குதலுக்கு மாறியது. அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (அகுஉஅN) உச்சி மாநாட்டில் அமெரிக்கா "தென்கிழக்கு ஆசியாவிற்கு மீண்டும் வந்துவிட்டது' என அறிவித்தார். (அகுஉஅN) உடைய அடுத்த ஆண்டுக் கூட்டத்தில், கிளின்டன் வேண்டுமென்றே சீனாவுடனான அழுத்தங்களை எரியூட்டும் வகையில் அமெரிக்கா தென் சீனக்கடலில் "ஒரு தேசிய நலனைக் கொண்டுள்ளது' என்றும் (அகுஉஅN) அங்கத்துவ நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மோதல்களில் மத்தியஸ்தம் செய்யத்தயார் என்றும் அறிவித்தார். இதற்கு முகங்கொடுக்கையில் சீன வெளியுறவு மந்திரி "இத்தகைய கருத்துக்கள் கிட்டத்தட்ட சீனா மீதான தாக்குதலுக்கு ஒப்பாகும்' என்றார். அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகள் தொடர்ச்சியான மோதல்களைத் தூண்டும் வகையில் தங்கள் உரிமைகளை தென்சீனக் கடலில் ஆத்திரமூட்டலுடன் முன்வைத்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க இந்தியபசுபிக் பகுதி முழுவதும் அதன் இராணுவக் கூட்டுக்களை குறிப்பாக ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் உறுதியாக வலுப்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்கா போர்க்கப்பல்களைக் கொடுத்தது. வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியது. சிங்கப்பூரில் புதிய கடலோரப் பகுதிப் போர்க்கப்பல்களைத் தளமிறக்கியது. தைவானுக்கு மிகப் பெரிய புதிய ஆயுதங்கள் தொகையை விற்பனை செய்தது மற்றும் இந்தோனேசியாவின் இழிந்த கோபாசஸ் விசேட படைகளுடன் அமெரிக்க கூட்டுழைப்பிற்கு இருந்த தடையை நீக்கியது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி ஒபாமா அவுஸ்திரேலியாவிற்குப் பயணித்து வடபுறம் இருக்கும் டார்வின் நகரில் 2,500 மரைன்கள் நிறுத்தப்படுவர் என்றும் மிகப் பரந்த முறையில் அவுஸ்திரேலிய கடற்படை, விமானத் தளங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அமெரிக்க இராணுவ மூலோபாயத்தின் மையத்தானம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் முக்கிய "சந்திப்பகுதிகளின்' கடற்படை மேலாதிக்கம் கொள்வது ஆகும். குறிப்பாக மலாக்கா ஜலசந்தியில்இதன் வழியேதான் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் சீனா இறக்குமதி செய்யும் முக்கிய எரிசக்தி மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அமெரிக்க போர்க் கப்பல்களுக்கு "தடையற்ற கடல்பயணச் சுதந்திரம்' இந்த நீர்வழிகள் மூலம் என்பது அமெரிக்க கடற்படைக்கு சீனாவை முற்றுகையிடும் திறனைக் கொடுத்தல் என்பதுடன் சீனப் பொருளாதாரத்தை மண்டியிடச் செய்தல் என்பதும் ஆகும். 2006ஆம் ஆண்டு அதன் நான்காண்டுகளுக்கான பாதுகாப்பு மறு ஆய்வில் பென்டகன் அட்லான்டிக்கில் இருந்து நகர்தல் என்பது குறித்து முன்னிழல் காட்டியது. அதையொட்டி குறைந்தபட்சம் 6 விமானந்தாங்கி போர்க்கப்பல்களும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களில் 60% மும் பசிபிக்கிற்கு ஒதுக்கப்பட்டன.

பொருளாதாரத் துறையில் நிர்வாகம் பலமுறையும் சீனா அதன் யுவான் டொலருக்கு எதிராக மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. இந்தச் செயற்பாடு சீன ஏற்றுமதித் தொழில்களின் கணிசமான பிரிவுகளை அழித்துவிடக்கூடும் அகஉஇ எனப்படும் ஆசிய பசுபிக் பொருளாதார உச்சிமாநாடு நவம்பரில் நடந்தபோது, ஒபாமா ஒரு புதிய வணிக முகாமை அறிவித்தார். அட்லான்டிக் இடையிலான கூட்டுழைப்பு கூணூச்ணண் கச்ஞிடிஞூடிஞி கச்ணூtணஞுணூண்டடிணீ அமெரிக்காவின் வணிக விதிகளை பெய்ஜிங் ஏற்க வேண்டும் என்ற கட்டாயத்தைக் கொடுப்பது ஆகும். அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளும் வேண்டுமென்ற பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. லிபியா மீதான நேட்டோப் போர் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் ஆகியவை சீனாவின் முதலீடுகள் மற்றும் எரிசக்தி விநியோகங்களை குறை மதிப்பிற்கு உட்படுத்திவிட்டன.

இந்த சீனாவுடனான அமெரிக்க மோதலுக்கு உந்துதல் சக்தி ஒப்புமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரச் சரிவு ஆகும். அமெரிக்கா ஒரு மூலோபாயத்திறன் கொண்ட போட்டி நாட்டின் எழுச்சியைத் தடுக்க உறுதி கொண்டுள்ளது. பென்டகனின் சமீபத்திய மூலோபாய வழிகாட்டி தற்போதைய "சர்வதேச ஒழுங்கு விதிமுறைகளின் அடித்தளத்தில்' தக்கவைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுகிறது. ஆனால், இது அமெரிக்க மேலாதிக்கத்திற்கு உட்பட்ட உலக ஒழுங்கு தொடர்தல் என்னும் பொருளைத் தரும். அதில் பசிபிக் பெருங்கடல் ஒரு நூற்றாண்டு காலமாக "ஒரு அமெரிக்க ஏரி' என்று கருதப்பட்டது. சீனாவோ அமெரிக்க இராணுவக் கூட்டுக்களின் வலைப்பின்னலால் சூழப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் பொருளாதார, மூலோபாய நலன்கள் வாஷிங்டனுடையதற்கு தாழ்த்தப்படும்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மையம் கொள்ளும் பேரழிவு தரும் உலக மோதல் என்னும் நிலை கொடுக்கும் ஆபத்திற்கு உலகம் சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆபத்து தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் அகநிலையான நோக்கங்களில் இருந்து வரவில்லை. மாறாக ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடி எரியூட்டும் பூகோளஅரசியல் போட்டியானால் வருகிறது. அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் அதன் இராணுவத்தை பயன்படுத்தி அதன் போட்டி நாடுகளைக் குழிபறிப்பிற்கு உட்படுத்தி பொருளாதாரச் சரிவின் சுமையை ஏற்கக் கட்டாயப்படுத்துகிறது. இதையொட்டி சீனாவுடனான மோதல் என்பது தவிர்க்க முடியாதது ஆகும். பிந்தைய நாடோ தான் மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி விநியோகங்களை உலகம் முழுவதும் பெற வேண்டிய நிலையினால் தற்போதைய சர்வதேச ஒழுங்கை குழப்பத்திற்குள்ளாக்குகின்றது. பல ஆபத்துகளைக் கொடுக்கும் இடங்களான வட கொரியா தாய்வான், தென்சீனக்கடல்மூன்று மட்டும் குறிப்பிடப்படுகிறது. போரைத் தூண்டிவிடக்கூடும்.

ஒரு புதிய உலக யுத்தத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். அது இந்த யுத்தத்திற்கான காரணமான முதலாளித்துவ அமைப்பு முறையையும் மற்றும் உலகம் காலாவதியான போட்டி அரசுகளாக பிளவுபட்டிருப்பதையும் இல்லாதொழித்து ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலம் தான் சாத்தியமாகும். இது தான் உலக ட்ரொஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்காகும்.